மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகச் சென்று வருகின்றமையாலும், போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இன்று(2) காலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகச் சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
சுகாதாரத் துறையினர் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளைச் சிறப்பாக முன்னெடுக்க மக்களுடைய ஆதரவை எதிர் பார்த்துள்ளோம்.
மக்கள் விழிப்பாக இருப்பதன் மூலம் சுகாதாரத் துறைக்கு தமது ஆதரவை வழங்க இயலும். மன்னார் மாவட்டத்தில் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தொற்றாளர் இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.