வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
முல்லைத்தீவு - வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், பொங்கல் உற்சவத்திற்கான அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(05.05.2026) வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கான அறிவிப்புக்கள்
இதன்படி, உணவகம் சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்களான ஜஸ்கிறீம் கடை மற்றும் வாகனங்கள், பூந்தி இனிப்பு வகைகள், மிக்சர் கடைகள் ஆகிய அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளூராட்சி சபைகளின் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும்.

ஜஸ்கிறீம், உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர் சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமே ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்தல் வேண்டும். அத்துடன் அதற்கான பற்றுச் சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.
உணவகத்திற்கும், சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் சனிக்கிழமை (30.05.2026) மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும்.

காவடி உரிமையாளர்கள் 29.05.2026 க்கு முன்னர் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவரின் அனுமதியினை பெற்று கொள்ள வேண்டும். உணவு கையாளும் நிலையங்கள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும். சிகரெட், புகையிலை, மதுசாரம் ஆலய வளாகத்தினுள்ளே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
உணவு கையாளும் நிலையங்களில் உணவு கையாள்வதற்கு பிளாஸ்ரிக் பாத்திரங்கள் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுமாயின், பொதுசுகாதார பரிசோதகர் 077-2054320 / 077-1211880 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.