தமிழ் பேசும் இளைஞர்களை கைது செய்து கஸ்டத்திற்குள் தள்ளிவிடும் அரசாங்கம் – இரா.சாணக்கியன்
இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் பேசும் இளைஞர்களைக் கைது செய்து கஸ்டத்திற்குள் தள்ளிவிடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் நாகராசா பிரதீபராசா என்பவர் செவ்வாய்க்கிழமை (01) பெரியபோரதீவு மட்பாண்ட நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புதன்கிழமை (02) மாலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குப் புதன்கிழமை (02) மாலை நான் சென்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒரு அங்கத்தவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு ஆதரவாளரும், முன்னாள் போராளியுமான எமது சகோதரர் ஒருவரைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளார்கள்.
நான் இன்று அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர் மீது வைத்திருக்கின்ற குற்றச்சாட்டு என்னவெனில் 2017 ஆம் ஆண்டு முகநூலில் ஏதோ ஒரு பதிவைப் போட்டதாகவும், அந்தப் பதிவின் காரணத்தால் அவரை விசாரணைக்காக எடுத்ததாகவும், சொல்லியிருக்கின்றார்கள்.
அவருக்கு எதிராக இருக்கும் ஆதாரம் என்னவெனில் முகநூலிலே ஏதோ ஒரு புகைப்படம் இருப்பது மட்டும்தான். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு தமிழ்பேசும் இளைஞர்களை வடக்கு கிழக்கு மாத்திரமின்றி இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் கைது செய்து இவ்வாறு கஷ்ரத்திற்குள் தள்ளிவிடுவதை நாங்கள் கடந்த ஒரு சில மாதங்களாக அவதானிக்கின்றோம்.
தற்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சகோதரர் கடந்த யுத்தத்திலே ஒரு கலை இழந்த விசேட தேவை உள்ள ஒருவராவார், இவர் ஒரு புணர்வாழ்வளிக்கப்பட்டவராவார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து வடக்கு கிழக்கிலே நடக்கிறது. ஏன் என்பதை நாங்கள் ஆராயவேண்டும். தற்போது புணர்வாழ்வளிக்கப்படாதவர்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதை நாங்கள் காண்கின்றோம்.
அவர்கள் அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படுகின்றார்கள். அவ்வாறு அவர்கள் இருக்கும்போது அப்பாவியான இவ்வாறான இளைஞர்களை அதாவது திருமணம் செய்து ஒரு மாதம்தான் முடிவுற்ற நிலையில் குறித்த அந்த நபரைக் கைது செய்து வைத்துள்ளதென்பது மிக மிகக் கவலையான விடயம்.
மேலும் அவருக்கு எதிராக ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பிலும், அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப் போவதாக அறியமுடிகின்றது.
உண்மையிலேயே பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி. கட்சியின் தலைவர் றோகண விஜயவீர என்பவருக்குச் சிலை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பிருக்கும் போது, பதியப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் சில அஞ்சலி நிகழ்வு நடாத்தியதைப் பிழையெனச் சொல்வார்களாக இருந்தால் தற்போது எத்தனையோ பேரை அரசாங்கம் கைது செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு போவதை நாங்கள் அவதானிக்க முடியும். பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியை அகற்றுவது மாத்திரமல்லாமல், தற்போது அப்பாவி தமிழ் இளைஞர்களைக் கைது செய்து அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதேவேளை அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும். தற்போது தமிழ் இளைஞர்களை எந்தவித கட்சி பேதங்கள் இன்றியும், கைது செய்துள்ளார்கள்.
வாகரைப் பிரதேசத்திலே 2020 நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தீவிர ஆதரவாகச் செயற்பட்டவர், அதேபோல் செங்கலடி பிரதேசத்திலே கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் முற்போற்கு தமிழர் அமைப்போடு சேர்ந்து செயற்பட்டவராவர்.
இவ்வாறு கட்சி போதமின்றி அரசாங்கம் தமிழர்கள் மீது வன்முறைகளைக் கையாளுகிறது. இந்த அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் ஏன் இதுபற்றி கதைக்காமலுள்ளமை கவலையாகவுள்ளது.
நீங்களும் தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கஜேந்திரககுமார் அவர்களின் கட்சி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ஆகியோர் சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஒரு மனுவைக் கொடுத்துள்ளோம்.
நாங்கள் தொடர்ந்து இவ்வாறான விடயங்களை மேற்கொள்கின்ற போது அதனைப் பின்தொடர்ந்து பார்க்க முடியாமல் உள்ளதனால் தினேஸ் குணவர்த்தன அமைச்சரையே முன்னின்று கையிலெடுத்துச் செயற்படுமாறு கேட்டிருந்தோம். கடந்த வருடத்திலிருந்து முகநூலிலே, புகைப்படம் போட்டு ரெக் செய்தவர்களைச் சிறு பிள்ளைத்தனமான முறையில் கைது செய்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தோம். அதற்குப் பிணை வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்குப் பிணை வழங்கியது போல்
ஏனையவர்களுக்கும் வழங்கலாம் என நான் தெரிவித்திருந்தேன். சந்திரகாந்தன்
அவர்களும் ஏனைய தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கு முன்வர வேண்டும் என அவர்
இதன்போது தெரிவித்துள்ளார்.


