அரசாங்கம் நாட்டினை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது சிறந்தது - ஹீனைஸ் பாரூக்
இந்த நாட்டை முன்கொண்டு செல்வதற்கு தட்டுத் தடுமாறுகின்ற இந்த அரசாங்கத்தைப் பார்க்கின்ற போது அவர்கள் இந்த ஆட்சியையும், அரசாங்கத்தையும் ஆட்சி செய்யக்கூடிய , இந்த அரசாங்கத்தை முன்னெடுக்கக் கூடிய எதிர்க் கட்சிக்கு விட்டுக் கொடுப்பது தான் இந்த நேரத்தில் இவர்கள் நாட்டு மக்களுக்குச் செய்கின்ற ஒரு நல்ல விடயமாக இருக்கும் என வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மகிந்த அரசாங்கமானது கடந்த காலத்தில் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள், மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்ட இனவாத கதைகள்,செயற்பாடுகள் இன்றைய நாட்டின் நிலைமைகளைப் பார்க்கின்ற போது நிச்சயமாக அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறுவதற்காக மக்களை ஏமாற்றிய விடையம் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் இன்று நடு வீதியில் நின்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேடிக்கையான விடயம் என்ன என்றால் இந்த அரசாங்கமானது மதுபானத்திற்குக் கொடுத்துள்ள முன்னுரிமை இந்த நாட்டில் வாழ்கின்ற எதிர் கால சமூகமான மாணவச் சமூகத்திற்குக் கொடுக்காத நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
இன்று எத்தனையோ கஷ்டப்பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தமது பாட வகுப்புக்களைத் தொடர்வதற்கான செயலி மூலமான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்ற நிலையில் உள்ள நிலையில், இவர்கள் எவ்வாறு மதுபானத்தை, மதுபானம் பயன்படுத்துகின்றவர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதற்காக அமைச்சரவை கூடிக் கலந்துரையாடி அதற்கான முடிவையும் எடுத்துள்ளனர்.
ஆனால் குறித்த முடிவுக்குச் சுகாதார மட்டத்தில் எதிர்ப்புக்கள் வந்துள்ளது. அமைச்சர்கள், புத்திஜீவிகள், சட்ட சபையில் இருக்கின்ற ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மதுபானம் பயன்படுத்துகின்றவர்களுக்கான வசதியை ஏற்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்பில் ஒரு சிறிய அளவு கூட மாணவர் சமூகத்திற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் எடுக்காத நிலையைப் பார்க்கின்ற போது இந்த அரசாங்கம் எந்த அளவில் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது என்பதை மக்கள் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
இன்று எரிபொருட்களின் விலையினை அதிகரித்துள்ள விடையத்தைப் பார்க்கின்ற போது கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் 30 ஆம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அன்றைய நிலைமையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்து இருந்தது.
பெற்றோலியத்தின் விலையைக் குறைப்பதற்கு மக்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பணத்தைச் சேமித்து எதிர் காலத்தில் பெற்றோலியத்திற்கு விலை ஏறும் போது அதனை நாங்கள் மக்களுக்குச் சமமாகச் செய்வதற்குச் சேமிக்கின்றோம் என்றார்கள்.
ஆனால் இன்று அந்த சேமிப்பு பணம் எங்கே என்று பார்த்தால் அவ்வாறு பணம் சேகரித்ததோ அல்லது சேகரித்த பணத்திற்கு என்ன நடந்தது? என்பதற்கு அந்த துறை சார்ந்த அமைச்சர் அல்லது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களோ அல்லது ஜனாதிபதியோ அதற்குப் பதில் கூற முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.
பெற்றோலிய விலையேற்றத்தைப் பொறுத்தமட்டில் இன்று பார்க்கின்றோம் ஆளும் கட்சிக்குள் ஜனாதிபதி ஒரு கருத்தையும்,பெற்றோலிய அமைச்சர் ஒரு கருத்தையும் அமைச்சரவைக்குள்ளே ஒரு கூட்டு முடிவைக் கூற முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள்.
குறித்த அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதியும்,பிரதமரும், கட்சியின் செயலாளரும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் குறித்த அமைச்சர் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்திய போது அதன் பின்னர் சிறு பிள்ளைத் தனமாக, சிறு பிள்ளைகளுக்குக் கதை கூறுவது போன்று பிரதமர் மற்றும் ஏனையவர்கள் அந்த விடையத்தை மழுங்கடிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதிலிருந்து பார்க்கின்ற போது இந்த நாட்டை முன்னெடுப்பதற்கும்,கொண்டு
செல்வதற்கும் தட்டுத் தடுமாறுகின்ற இந்த அரசாங்கத்தைப் பார்க்கின்ற போது அவர்கள்
இந்த ஆட்சியையும், அரசாங்கத்தையும் ஆட்சி செய்யக்கூடிய , இந்த அரசாங்கத்தை
முன்னெடுக்கக் கூடிய எதிர்க் கட்சிக்கு இவர்கள் விட்டுக் கொடுப்பது தான் இந்த
நேரத்தில் இவர்கள் மக்களுக்கும், இந்த நாட்டிற்கும், இளம்
சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் செய்கின்ற ஒரு நல்ல விடையமாக இருக்கும் என்பதை
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நான் எச்சரிக்கையாகக் கூறிக் கொள்ள
விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.