தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களை குழப்புகின்றனர்! - அமைச்சர் டக்ளஸ்
தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களிற்காக மக்களைக் குழப்புகின்றனரே தவிர மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கோவிட் நிலைமைகள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி, பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார சேவையினர் உள்ளிட்ட அரச திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஆடைத்தொழிற்சாலைகளில் தொற்றுக்கள் பரவுவதாகக் குறிப்பிடப்பட்டாலும் அது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும் ஓரிரு நாட்களில் குறித்த விடயம் அவதானித்து இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கலாம். இதேவேளை இந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாகச் சட்ட விரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இன்றைய கலந்துரையாடலில் எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. அடுத்த செவ்வாய்க்கிழமையளவில் மற்றுமொரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் விவகாரம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் வினவினர்.
அதற்கு பதிலளிக்கையில்,
குறித்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்நோக்கங்களை வைத்துக்கொண்டு மக்களைக் குழப்பும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாகச் சுமந்திரன் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் மீன்பிடிக்க யாரும் செல்வதில்லை. அங்கு எந்த விதமான தொழில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான நிலையில் மக்களைக் குழப்புகின்ற கருத்துக்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தடுப்பூசி ஏற்றும் விடயத்திலும் அந்த ஊசி வேண்டாம், இந்த ஊசி வேண்டும் என்ற
வகையில் மக்களைக் குழப்பும் வைகையிலான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து
வருகின்றனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.