நட்ட ஈட்டை வழங்குவதற்காகவே துறைமுக சட்டமூலத்தை நிறைவேற்றவுள்ளனர்- சந்திரசேகரன்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றிச் சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனாவிற்கு நகரத்தை முற்று முழுதாக வழங்கி சீனாவின் பிராந்தியமாக மாற்றுகின்ற நடவடிக்கையை எடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அல்லது வழமையான ஜனாதிபதி தேர்தலின் போது இந்த நாட்டின் தலைவர்களை உருவாக்குவதற்காக நிதி வழங்கிய அவர்களுக்குக் கொடுக்கின்ற நிறுவனம் தான் இந்த துறைமுக நகர அபிவிருத்தியை மேற்கொள்ளும் நிறுவனம். முன்னைய ஜனாதிபதி மற்றும் அவருடைய மனைவி அவர்களின் பெயரால் பல கோடி மில்லியன் கணக்கான ரூபாய் பரிமாறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
பரிமாறப்பட்ட நட்ட ஈட்டை வழங்குவதற்காகவே இன்று இந்த சீன நிறுவனத்திற்கான துறைமுக சட்ட மூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற உள்ளனர். எங்கள் எல்லோருக்குமே தெரியும் .
இந்த சட்டமூலம் என்பது அல்லது இவ்வாறான ஒரு சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அல்லது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுடமாக இருந்தால் எமது நாட்டினுடைய இறைமை குழிதோண்டிப் புதைக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.
அது முற்றுமுழுதாக சீனாவுடைய பிராந்தியமாக எமது நாட்டுச் சட்டங்களுக்கு
உட்பட்டு எமது நகரசபைக்கு உட்படாத ,எமது நிதி சட்டங்களுக்கு உட்படாத எமது
கணக்காய்வாளர் சட்டத்திற்கும் அல்லது கணக்காய்வாளர் அறிவிக்கப்படாத எங்களது
முதலீட்டுச் சபை சட்டத்துக்கு உட்படாத ஒரு தனி நாட்டை நிர்மாணிப்பதற்கான
நடவடிக்கையே இன்றைக்கு இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.