கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல்
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
விசாரணையில் வெளியான தகவல்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல்
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.