எதிலும் அரசில் கலந்திருப்பதே சமூகம் அவஸ்தைப்படுவதற்கு காரணம்! - நஸிர் அஹமட்
எங்கும், எதிலும் அரசியல் கலந்திருப்பதே தற்போது நமது சமூகம் அவஸ்தைப்படுவதற்குக் காரணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் இளம் தாரகை விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், ஏறாவூரின் அரசியல் முன்னோடிகளான முன்னாள் விசேட ஆணையாளர் மர்ஹம் எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் வைத்தியர் பரீட் மீராலெப்பை ஆகியோரின் நினைவாகவும் நடாத்தப்பட்ட கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை போட்டியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் எல்லாவற்றிலும் அரசியலை மாத்திரம் மையமாக வைத்து சமூகத் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். இதுவொரு பாரம்பரியமாக இடம்பெற்று வந்துள்ள நிகழ்வாகும்.
எங்களுடைய சமூக அரசியல் தலைமைகள் இவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக இப்பொழுது ஒட்டுமொத்த சமூகமும் இந்த சிந்தனைக்குள் அகப்பட்டு அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.
இதனைப் புரிந்துகொண்டு எங்களை நாங்கள் கண்ணாடியில் பார்க்க வேண்டியுள்ளது. அரசியலை மையமாக வைத்து அனைத்தையும் அணுகும் அசிங்கமான போக்கை மாற்றியமைக்க வேண்டும்.
தேர்தல் முடிந்த கையோடு அரசியலை விட்டு விடவேண்டும். எல்லாவற்றிலும் அரசியலைக் கலப்பதால் ஆன பயன் ஏதுமில்லை. இது பற்றி ஒட்டு மொத்த சமூகத்திலுள்ள அமைப்புக்களும் தனி நபர்களும் சிந்திக்க வேண்டும்.
சமீபத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுடன் மிக நீண்டநேரம் பேசக் கிடைத்தது. கிழக்கில் இளைஞர்களை எவ்வாறு அணி திரட்டி நாட்டின் தேசிய அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும் என்பது பற்றி விவாதித்தோம்.
விளையாட்டு அமைச்சர் நாமலினால் தற்போது குருநாகலில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை மட்டக்களப்பிலும் நடத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதற்குத் தான் மட்டக்களப்பில் தங்கியிருந்தாவது அலுவல்களைக் கவனிப்பேன் எனக் கூறியுள்ளார். இவ்வாறான ஒரு அமைச்சர் எங்களுக்குக் கிடைத்துள்ளது மிகப் பொருத்தமான வாய்ப்பாகும் .
ஏறாவூரில் தொழில் இல்லாத இளைஞர்கள், அங்கவீனர்கள், விதவைகள் அதிகம் உள்ளனர். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் அடையாளப்படுத்தப்பட்டுத் தீர்க்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
.