முறைப்பாடு செய்யுங்கள்! சாட்சிக்கு நான் வருகிறேன் - மட்டக்களப்பில் நாமல் அறிவிப்பு
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வேலைத்திட்டங்களை தற்போது எமது அரசாங்கமே ஆரம்பித்துள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே இருந்த அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்வதாக கூறி வாக்கு கேட்டார்கள், மக்களும் வாக்களித்தார்கள், ஆனால் எதுவும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நாங்கள் 16 கைதிகளை விடுதலை செய்துள்ளோம், சில இளைஞர்கள் முகநூலில் பதிவு போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு நீதிபதிகளுடன் பேசி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுகத்துடன் சேர்வதற்கும் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இளைஞர்களைச் சிறையில் வைத்திருப்பது எமது எதிர்பார்ப்பு இல்லை. இளைஞர்கள் இந்த நாட்டின் முக்கியமான நபர்கள் அவர்கள் புனர்வாழ்வளித்து மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். தற்போது ஒரு அம்மா கூட இந்த விடயம் தொடர்பாக என்னோடு பேசியிருந்தார்.
நான் நினைக்கின்றேன் மிக விரைவில் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று, அத்தோடு மண் வியாபாரிகள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது, அதற்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் பிடித்த விடயம் எமது பரம்பரை பெயரைச் சொல்வதே, எதிர்க்கட்சிக்கும் விருப்பம் எமது பெயரைப் பாவிப்பது, காரணம் அப்போதுதான் இவர்களது செய்திகள் ஊடகங்களில் வரும் என்பதற்காக. எமது அரசாங்கம் நீதிக்கு விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காது.
எமது பரம்பரை பெயரை எவரேனும் பாவித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால், பொலிஸில் சென்று முறைப்பாடு செய்யுங்கள். சாட்சிக்கு நான் வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.