எரிபொருள் விலை உயர்வை கண்டித்துள்ள அரசாங்க கட்சிகளின் தலைவர்கள்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் மீது எரிபொருள் விலை உயர்வின் பொறுப்பை சுமத்தும் நடவடிக்கையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பான முடிவு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட அரசாங்க முடிவாக இருந்தபோதிலும், விலைவாசி உயர்வுக்கு அமைச்சர் கம்மன்பில மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஜனநாயக இடது முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச, அபே ஜனபல மக்கள் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்ஹா, லங்கா சம சமாஜாக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.வீரசிங்க, எக்சத் மகாஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸ் மற்றும் இலங்கை மகாஜன கட்சியின் உறுப்பினர் அசங்க நவரத்ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு நெருக்கடியின் பிடியில் அரசாங்கமும் மக்களும் இருப்பதாக அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய சூழலில், எந்தவொரு அரசாங்கமும் எரிபொருள் விலையுயர்வு உட்பட்ட செல்வாக்கற்ற சில முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்படும் என்ற இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நிவாரணம் வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அரசாங்க கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் மீது குறை கூறும் நடவடிக்கையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பொதுஜன பெரமுனவின் பொதுச்
செயலாளர் அரசாங்கத்துக்குள் பிளவு என்பது குறித்து மக்களின் மனதில்
சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக அரசாங்க கட்சிகளின் பிரதிநிதிகள்
தெரிவித்துள்ளனர்.