ரணிலின் நாடாளுமன்ற வருகையுடன் ஆரம்பமாக போகும் அரசியல் விளையாட்டுக்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க சில காலங்களுக்கு முன்னர் இது சம்பந்தமான ஜோதிட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டிருந்தார்.
ஜூலை 8 ஆம் திகதி பின்னர் எந்த தினத்திலும் பதவியேற்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. எனினும் ஜூன் 22 ஆம் திகதி பதவியேற்குமாறு எதிர்க்கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்திருந்தனர் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை 8 ஆம் இலக்கம் என்பது பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு விருப்பமான இலக்கமாகும். எது எப்படி இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையானது மற்றுமொரு சிறிய கட்சிக்கு கிடைத்த பதவியில் எவரோ சத்தியப் பிரமாணம் செய்கிறார் என கருத முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில், வரலாற்றில் பலவீனமான இடத்தில் வீழ்ந்து காணப்படும் நிலைமையிலும் ரணில் விக்ரமசிங்க என்பவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்து தரப்பினருக்கும் சவாலை ஏற்படுத்தக் கூடிய நபர்.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் சாணக்கியத்தை தமக்கு சாதகமான முகாமைத்துவம் செய்துக்கொள்ள சில தரப்பினர் முயற்சித்து வருவதும் இரகசியமான விடயமல்ல.
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையுடன் அரசியல் துறையினர் இதுவரை காணாத பல அரசியல் விளையாட்டுக்களை எதிர்காலத்தில் காணமுடியும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சியில் இருக்கும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 வது படைப்பிரிவு என்ற அமைப்பு, ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை குறித்து மிகவும் அக்கறை காட்டி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஒருவர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர், எதிர்க்கட்சிக்குள் நீருபூத்த நெருப்பாக இருக்கும் சிறியளவிலான வெடிப்புகள் ஓரளவுக்கு அதிகரிக்கும் என்பது நிச்சயம்.
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையின் ஊடாக எதிர்க்கட்சியை பிளவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை சூட்சுமான முறையில் கட்டமாக முன்னெடுக்கும் திட்டமொன்றை ஆளும் கட்சி வகுத்து வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.