தொல்லை தரும் தொலைப்பேசி அழைப்புகள்! பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
இலங்கைத் தொலைத்தொடர்புச்சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை வலுப்படுத்த இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொதுமக்களுக்கு தொடர்ச்சியான தொல்லை தரும் தொலைப்பேசி அழைப்புகள், செய்திகள் மற்றும் தொலைபேசி எண்களை அனுமதியின்றி வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்
சட்ட நடவடிக்கை
மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் அழைப்புகள், செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இலங்கை பொலிஸார் இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை வலுப்படுத்தியுள்ளது.

அதன்படி, குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் கணினிக்குற்றப்புலனாய்வுப்பிரிவின் தகவல் படி, 2024 ஆம் ஆண்டின் சட்டம் எண் 39 ஆல் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் இலங்கை தொலைத்தொடர்புச் சட்டம் எண் 25 இன் பிரிவு 32 இன் கீழ், நியாயமான காரணமின்றி, தொல்லை அல்லது துன்புறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் அழைப்புகளை மேற்கொள்பவர் அல்லது செய்திகளை அனுப்புபவர், அல்லது பிற சந்தாதாரர்களின் எண்களை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுபவர் ஒரு குற்றத்தை செய்கிறார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
அதன்படி, குற்றவாளிகளுக்கு 100,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அபராதம் செலுத்த தவறினால், ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அழைப்புகளின் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகளுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது என்றும், துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் சட்ட நிவாரணம் கோரலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.