இலங்கையில் தங்க நகை - பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்களை வீட்டில் வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் ‘செல்பி’ புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் பண்டிகை காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விடுமுறையில் இருப்பது தொடர்பான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமைகிறது.
இவ்வாறான பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது.
அவ்வாறு நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
அத்துடன் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பணியாளர்கள் குறித்து எச்சரிக்கை
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொலிஸார் அண்மையில் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ வேலைக்குச் சேரும் நபர்கள், இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் என்பவற்றைப் பெறுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும் சரிபார்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகை மற்றும் பணத்தைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும், பணியாளர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், புதிய பணியாளர்கள் குறித்த விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை

அதேநேரம் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பல குடியிருப்பாளர்கள் காற்றோட்டத்திற்காக இரவில் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்கின்றனர். இத்தகைய பழக்கவழக்கங்கள் குற்றவாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் வசதிக்காக பாதுகாப்பை புறக்கணிக்க கூடாது. வீட்டு உரிமையாளர்கள் உறங்கச் செல்வதற்கு முன், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காற்றோட்டத்திற்காகத் திறந்து வைக்கப்படும் ஜன்னல்களில் பாதுகாப்பான உலோகக் கம்பிகளைப் பொருத்துதல், அனைத்துக் கதவுகளும் வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் ஊடுருபவர்களைத் தடுப்பதற்காகப் போதுமான வெளிப்புற விளக்குகளைப் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நபர்கள் குறித்து தாமதமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறும் கோரியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் நாட்டில் தற்போது பொருளாதார சூழலில் தளம்பல் நிலை மற்றும் விலையுயர்வு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் போக்கு உள்ளதுடன், பணத்தின் தேவை பலருக்கும் அதிகரித்த நிலை காணப்படும் இவ்வாறான சூழலில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam