கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!
பொலிஸ் சீருடை அணிந்து கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி, அவரிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டின் மார்ச் 18ம் திகதியன்று, அப்போதைக்கு கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணியில் இருந்த இந்த அதிகாரிகள், முகமது ரவூஃப் முகமது முஆத் அகமது என்ற கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தியுள்ளனர்.
இடைநீக்கம்
அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும், இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அவரிடம் இருந்து கொள்ளையடித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட குழுவொன்று, இந்தப் பெரும் கொள்ளை குறித்து நீண்ட விசாரணை நடத்தி, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது அவர்கள் விளக்கமறியலில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது விளக்கமறியலில் உள்ள இந்த அதிகாரிகளின் சேவைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில், பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றும் உள்ளடங்கியுள்னர்.

அதன்படி, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர், கடுகன்னாவ மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் கொபெய்கனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சார்ஜென்ட் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
அத்துடன் செவனகல, கிராண்ட்பாஸ், தெலிக்கடை மற்றும் பதுளை பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் குழுவினர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam