கோட்டாபய காலத்தில் இருந்த அதியுயர் பணவீக்கத்தை குறைத்துள்ள அநுர அரசாங்கம்..
கோட்டாபய காலத்தில் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணஆரச்சி, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த பணவீக்கம்..
குறித்த நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியபோது நாட்டின் பணவீக்கம் 70 சதவீதமாக இருந்தது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 5 சதவீதத்திற்கும் குறைவான நிலையான அளவில் பராமரிக்கப்படுகின்றது.
பல்வேறு இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய போர்கள் போன்ற பெரிய அளவிலான உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கத்தால் பணவீக்கத்தை இவ்வளவு குறைந்த மட்டத்தில் பராமரிக்க முடிந்துள்ளது.

பணவீக்க விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை ஏற்க முடியாது என்று வாதிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மட்டுமே பண அச்சிடுதல் நடைபெறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது போன்று, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தன்னிச்சையான பண உருவாக்கம் இருக்காது என்றும் லக்ஸ்மன் நிபுணஆரச்சி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணஆரச்சி தனது கூற்றின் மூலம் நாட்டின் பணவீக்க வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றக் காலகட்டத்தை நுட்பமாகத் தவறவிட்டுள்ளார் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் பொருளாதார சீர்திருத்தக் காலத்தில்தான், 2022ல் 70 சதவீதமாக இருந்த உயர் பணவீக்க விகிதமானது, 2024 செப்டம்பர் 21ஆம் திகதி அன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது எதிர்மறை மதிப்பிற்கு வேகமாகச் சரிந்தது. பணவீக்கம் பூச்சியத்துக்கும் கீழே இருந்தது.
அந்தப் பின்னணியில், தற்போதைய அரசாங்கம் 5 சதவீதத்திற்கும் குறைவான பணவீக்க அளவையே பெற்றிருந்தபோதிலும், ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலகட்டத்தின் பொருளாதாரப் பங்களிப்பை மறைத்து, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைய நிலையை 2022ஆம் ஆண்டுடன் நேரடியாக ஒப்பிட முயன்றுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.