வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு - பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4 ம் பிரிவு கூட்டுறவுச்சங்க வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று(20) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரிமையாளர் முச்சக்கரவண்டியில் வாடகைக்குச் சென்று சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய பின்னர் முச்சக்கரவண்டியை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து கொண்டிருந்துள்ளது.
இதனை அவதானித்த பின்னர் தண்ணீரை ஊற்றி தீயைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்ததாகவும் இருந்தபோதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் முன்பகுதி யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை வீட்டின் முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இரு குடும்பங்களுக்குள்ளே ஏற்பட்ட சண்டை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri