சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியானதால் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்களை தேடும் பொலிஸார்
அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் சென்ற மோட்டார் வாகனம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
அதிவேக வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் மோட்டார் வாகனம் ஒன்றில், அதன் ஜன்னல் பகுதிகளில் அமர்ந்து கொண்டு அதன் பயணிகள் செல்லும் காணொளி பதிவொன்று சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது இவர்களுக்கு மட்டுமன்றி வீதியில் செல்லும் ஏனையவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாகனமொன்றில் பயணிக்கும் போது இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றச் செயல் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் , வாகனத்தின் இலக்கத்தகடு தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஆராய்ந்து பார்த்தப் போது , அது கண்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமான வாகமென்றும் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனத்தின் உரிமையாளரால் அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது வேறு எவருக்கேனும் பொறுப்பளிக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் , அதில் பயணித்த நபர்களை அடையாளம் காணுவதற்காகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.