ஹிசாலினியிடம் வாக்குமூலம் பதிவு செய்யாமை தொடர்பில் காவல்துறையினர் விளக்கம்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 அகவை சிறுமியின் மரணம் குறித்து இலங்கை காவல்துறை சுயாதீன விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து குற்றவாளிகளையும் நீதிக்குக் கொண்டுவருவதற்காக, அனைத்து உண்மைகளும் பாரபட்சமின்றி மற்றும் தவறாமல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், துணை மன்றாடியார் நாயகம் உட்படப் பல அதிகாரிகள், முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விசாரணைகளை முறையாக மேற்கொள்ள ஆலோசனை வழங்குகிறார்கள்.
காவல்துறை அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேல் மாகாணத்தின் பொறுப்பான காவல்துறை அதிகாரியின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை என்ற கூற்றுக்குப் பதிலளித்துள்ள காவல்துறையினர்,
சம்பவம் நடந்த உடனேயே விசாரணை தொடங்கிய போதிலும், பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மோசம் காரணமாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.