குமார் குணரட்னம் உட்பட 14 பேரை கைது செய்ய தயாராகும் பொலிஸார்
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரட்னம் உட்பட 14 பேரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
காலிமுகத்திடல் போராட்டத்தை வன்முறை நோக்கி வழிநடத்திய குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்ய பொலிஸார், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.
அரச விரோத செயல்களுக்கு உதவிய கட்சிகள் தொடர்பிலும் நடவடிக்கை
அத்துடன் அரச விரோத செயல்களுக்கு பங்களிப்பை வழங்கிய அரசியல் கட்சிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அரசாங்கம், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தன. இவற்றின் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தின.
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வெளியேற மாட்டோம்
இதனிடையே காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்புகளோ, சமூக அமைப்புகளோ அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என குமார் குணரட்னம் கூறியுள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் ஒரு கோழை எனவும் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.