காணாமல்போன தங்க ஆபரணத்தை உரியவரிடம் வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்
பாடசாலைக்கு சிரமதானம் செய்வதற்காக சென்ற பெண்ணொருவரின் தங்க ஆபரணம் காணாமல்போயிருந்த நிலையில் தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்போருவ எனும் கிராமத்தில் பாடசாலை மற்றும் விகாரையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இச்சிரமதானத்திற்கு சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க ஆபரணம் வீதியில் விழுந்து கிடந்த சந்தர்ப்பத்தில் யான் ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மீட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த தங்க ஆபரணத்தை உரியவரிடம் வழங்கும் நோக்கில் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அருகில் சென்று தங்க ஆபரணம் அணிந்த யாராவது இருந்தால் தெரியப்படுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் பெண்ணொருவர் தனது கழுத்தில் போட்டிருந்த தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் குறித்த தங்க ஆபரணத்தை பொலிஸ் உத்தியோகத்தர் உரிய நபரிடம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.