கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார்.
சிகிச்சை அளிக்க தாமதம்..
இதன்போது, விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர்.

அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், குடிபோதையில் இருந்ததாகக் கூறி அவருக்கு அபராதத் துண்டினை (Ticket) வழங்கிவிட்டு, பின்னர் நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் (மதுபோதை எனக்கூறியதால்) அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். வைத்தியப் பரிசோதனையில் அவரது உடலில் மது அறவே இல்லை என்பதும், மூளை இரத்தக் கசிவே மயக்கத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடலை பெறுவதில் சிரமம்..
மரணத்தின் தறுவாயிலும் பிறருக்கு உதவும் நோக்கில் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர் இணங்கியிருந்தார். இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பே கனடியப் பிரஜாவுரிமை பெற்றதால், அவரிடம் கடவுச்சீட்டு (Passport) இருக்கவில்லை.
இதனால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரை கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுண் மற்றும் பீல் பிராந்திய பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பா ஆகியோர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தும், ஒரு தமிழ் இளைஞருக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு காரணமான பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உடலை தாயகம் அனுப்ப தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் எனவும் அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam