யாழில் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது
யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழக்கடையில், கடந்த சில நாட்களுக்கு முதல் இருவர் வந்து தாங்கள் பொலிஸ் அதிகாரி என தெரிவித்து கப்பம் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30ஆம் திகதி கடைக்கு வந்த குறித்த இருவரும் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவித்து, பழக்கடை வியாபாரியை மிரட்டி 7500 ரூபா கப்பமாகப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து யாழ். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பழக்கடைக்கு அருகேயுள்ள கடையின் சி.சி.டிவி கமரா பதிவுகளை எடுத்து அவற்றிலிருந்து இரு ஒளிப்படங்களை எடுத்து பழக்கடை வியாபாரிகளிடம் காட்டி அவர்களை இனங்காட்டுமாறு கோரியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரு சந்தேகநபர்களில் ஒருவர் நேற்றைய தினம் யாழ். பேருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் வழங்கியதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவ்விடத்திற்கு வந்து அவரை கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர் கீரிமலை - நல்லிணக்க புரத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
மற்றைய சந்தேகநபரையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது.