யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்
வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் என்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மாஅதிபர் யாழ் மறை மாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர். இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ் ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்எஸ்பியாக, டிஐஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாகத் தெரியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.
இன்றைய தினம் இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து வந்து என்னையும் சந்தித்துள்ளார். இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது.
அதேபோல பொலிஸார் பொதுமக்களுடன் கூடுதலாகப் பழகவேண்டும். மக்களுக்குச் சேவை செய்யத்தான் பொலிஸார்,இராணுவத்தால் அது முடியாது. எனவே மக்களுடன் உறவினைப் பேண வேண்டும்.
முன்னைய காலத்தில் வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு நான் கூறி இருக்கின்றேன்.
அது மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தோடு இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மக்களுக்குச் சேவை செய்யத் தான் பொலிஸார். ஆகவே பொலிஸார் அதிக அளவில் மக்களுடன் தொடர்பினை பேணவேண்டும்.
குறிப்பாகப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணிநேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும்.
அதனைச் செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்குப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும்.
தமிழ் பொலிஸார் எமக்கு கடமைக்குத் தேவையாக உள்ளது. ஏற்கனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகிறார்கள் மேலதிகமாக தமிழ் பொலிஸார் நமக்கு தேவையாக உள்ளார்கள்.
அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில் வடக்கிலிருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்குப் பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
வடக்கிலிருந்து பொலிசுக்கு விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.