மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞரொருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புதிய கொலனி பகுதியில் 13 அகவை சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் கைதான இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாங்குளம் பகுதியில் உள்ள டயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காகத் திருகோணமலையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைதேடி வந்துள்ளார். இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி பகுதியில் கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருகோணமலை - மூதூர் பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அழைத்து வந்து சுமார் ஒரு மாதகாலமாக குறித்த டயர்க்கடையில் வேலை செய்த இளைஞர் பெற்றுக்கொண்ட வாடகை வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புரசலாகப் பேசப்பட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையினை தொடர்ந்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய இளைஞரை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் 13 அகவை சிறுமியினையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது. சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நிலையில் சிறுமி குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றின் பதில் நீதிபதி வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14
நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு விசாரணைகள்
திருகோணமலை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.