ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்களை அழைத்து அச்சுறுத்தும் பொலிஸார்:மனோ கணேசன் தகவல்
கொழும்பில் நகரில் வாழும் மக்களின் முகநூல் கணக்கை பார்த்து போராட்டத்திற்கு ஆதரவானவர்களின் பின்னால் சென்று அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அச்சுறுத்துவது தற்போது பொலிஸாரின் பிரதான கடமையாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு நகரில் எனது தொகுதியில் இன்று பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்து அதனை பதிவிறக்கம் செய்து, முடிவடைந்து விட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மக்களின் பின்னால் சென்று பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி செய்திகளை அனுப்பி, அழைத்து பயமுறுத்தி அல்லது அச்சுறுத்த நடவடிக்கை எடுத்து வருவது கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பிரதான பணியாக தற்போது மாறியுள்ளது.
இதனை முற்றாக கண்டிக்கின்றேன். இதனை செய்யக்கூடாது. இங்கு போராட்டம் பற்றி பேசியதை கேட்டுக்கொண்டிருந்தோம். மே மாதம் 9 ஆம் திகதி வரை இந்த பேராட்டம் மிகவும் அமைதியாக நடந்தது.இதனை அனைவரும் அறிவார்கள். அதனை நாட்டு பிரஜைகளாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் நாம் பார்த்தோம்.
கொழும்பில் உள்ள சர்வதேச நாடுகளின் சில தூதுவர்களை நான் சந்தித்தேன். இது வடிவமைக்கப்பட்ட போராட்ட அமைப்பு என்று அனைவரும் கூறினர். இந்த போராட்டம் முழு உலகத்திற்கும் ஒரு வடிவம் என கூறினர்.
ஐரோப்பா, அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் போராட்டங்கள் அமைதியாக ஆரம்பித்தாலும் அவை வன்முறையில் முடியும் என அவர்கள் கூறினார்கள். ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை. இதனால், பொலிஸார் இதனை நிறுத்த வேண்டும் நாங்கள் என்று கூறுகிறோம்.
ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர் என்ற காரணத்திற்காக வெள்ளவத்தையில் உள்ள நான் நன்கு அறிந்த நண்பர்கள் சிலரை குற்றத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு அழைத்துள்ளனர். நான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசினேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு வழங்கப்பட்ட உத்தரவு என அவர் கூறினார்.
இது தவறான செயல். ஜனாதிபதி மாளிகைக்கு சென்று காணொளிகளை பதிவு செய்தார்கள், புகைப்படம் எடுத்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் சீருடைஅணிந்து கொண்டு ஜனாதிபதி மாளிகையில் உடற்பயிற்சி நிலையத்தை பயன்படுத்தியதை நான் பார்த்தேன். மற்றுமொருவர் பியானோ வாசித்தார்.
இப்படியான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதும், சாதாரண மக்களுக்கும், கொழும்பு மக்களுக்கும் இவற்றை காணும் போதும் என்ன தோன்றும் விலங்கியல் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்திற்கு செல்வது போல் வரிசையில் சென்றனர். சென்று பார்த்தனர். இது குற்றமில்லையே.
இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் தேடிச் சென்று கைது செய்யவார்கள் என்றால், அது முற்றிலும் தவறானது. ஜனாதிபதி இதனை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
நாங்கள் எப்போது வன்முறைகளை ஆதரிக்க மாட்டோம். தீவைப்பு போன்றவற்றை நாங்கள் ஏற்பதில்லை என்பதை பல முறை அவையில் கூறி விட்டேன். சாதாரண மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.
அவர்கள் வெறுத்து போய் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் தேசிய ஐக்கியத்திற்கு வருமாறு ஜனாதிபதி அழைக்கின்றார். ஆனால் என்ன செய்கின்றனர் எனவும் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.