கோட்டாபயவின் புகைப்படத்தை அகற்றிய பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்புகளின் போது பின்னணியில் காட்சிப்படுத்தப்படும் கட்சியின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் பதாகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பதாகையில் இடம்பெறாத கோட்டாபயவின் புகைப்படம்
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் டிஜிட்டல் பதாகையில் கோட்டாபய ராஜபக்சவின் புகைப்படம் இடம்பெறவில்லை.
இதற்கு முன்னர் அந்த டிஜிட்டல் பதாகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவர்களின் புகைப்படங்கள் மாறி, மாறி காட்சிப்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கும்.
புகைப்படம் நீக்கப்பட்டமை பற்றி எதுவும் தெரியாது - சாகர காரியவசம்
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புகைப்படம் டிஜிட்டல் பதாகையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் காட்சிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பதாகையில் கோட்டாபய ராஜபக்சவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மாபெரும் மக்கள் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றதுடன் பின்னர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். கோட்டாபய தற்போது தாய்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.