பிரதமர் வழங்கிய தகவல்கள் பிழையானவை - வசந்த
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பிழையானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சுப்ரீம் செட் செய்மதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வருமானம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த வருமானம் குறித்து பிரதமர் வெளியிட்ட தரவுகளில் பிழை இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வருமானம் தொடர்பில் வழங்கப்பட்ட புள்ளிவிபர தரவுகள் உள்ளடங்கிய ஆவணத்தின் ஒரு இடத்தில் வருமானம் ஆயிரம் ரூபாக்களில் குறிப்பிடப்பட்டு மற்றொரு பகுதியில் மில்லியன் ரூபாக்களில் குறிப்பிடப்பட்டதனால் இந்த குழப்பம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சுப்ரீம் செட் செய்மதி ஊடாக கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கைக்கு 342 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெறவில்லை எனவும் 342 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்மதி விண்ணுக்கு ஏவும் நடைமுறை விலை மனு கோரல்கள் இன்றி இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த ஓர் நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் தன்னிச்சயைாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச இந்த செய்மதி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



