உழவு இயந்திரம் ஆற்றில் விழுந்து விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி (Video)
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றைய தினம் (06.02.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக்கொண்டிருந்தபோது திடீரென் உழவு இயந்திரம் தானாக இயங்கி முன்நகர்ந்துள்ளது.
இதன்போது சாரதி, உழவு இயந்திரத்தை நிறுத்துவதற்காக இயந்திரத்தில் ஏறியபோது தடுக்கி விழுந்து, அடிப்பட்டு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சாரதி வைத்தியசாலையில் அனுமதி
இவ்வாறு படுகாயமடைந்த சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


