மக்களிடம் வாக்குகளைப் பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை: வே.இராதாகிருஷ்ணன் (Photo)
மக்களிடம் வாக்குகளைப் பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுவதோடு குரல் எழுப்புகின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - இராகலையில் நேற்று (21.11.2022) இடப்பெற்ற சந்திப்பொன்றில் வைத்து உரையாடும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்டப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 63 சதவீத மக்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்களின் பிரச்சினைகள்
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் கனவத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய அநுரகுமார திஸாநாயக்கவும், எமது தலைவர் மனோகணேசனும் கூட்டு பிரேரணையொன்றை கொண்டுவந்தனர்.
இவ்விவாதத்தில் பங்கேற்று எமது மக்களின் பிரச்சினைகளை நாம் பட்டியலிட்டோம். எனினும், ஒரு சிலர் இதனை விமர்சிக்கின்றனர். மலையக மக்கள் பிற்படுத்தப்பட்ட சமூகம் அல்ல என குறிப்பிடுகின்றனர்.
இந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவது. அந்த முறை இலங்கையில் இல்லை. மலையக மக்கள் பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையே நாம் கூற விளைந்தோம். 200 வருடங்கள் கடந்தும் வாழ்க்கை நிலை மாறவில்லை. லயன்கள் இன்றும் உள்ளன.
ஐ.நா சபையிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்
எமது முதாதையர்கள்தான் இந்நாட்டை வளமாக்கினார்கள். அப்படி இருந்தும் நாம் பின்தள்ளப்பட்டுள்ளோம்.
ஐ.நா. பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களை நாம் சந்தித்தோம். ஆவணம் கையளித்தோம். அடுத்த முறை இலங்கை வரும்போது மலையகம் வருவதாக கூறினார்கள்.
எனவே எமது பிரச்சினை இம்முறை ஐ.நா. அறிக்கையில் இடம்பெறும். எமது பிரச்சினை ஐ.நா.வரை சென்றதுகூட வெற்றிதான் என தெரிவித்துள்ளார்.