13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மோடிக்கு வலியுறுத்து: தூதரகத்தில் கையளிக்கப்பட்ட மனு
13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதரகத்தில் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் (17.07.2023) குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
மகஜர் கையளித்த பின் வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
13வது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிவில் சமூக பிரதிகளாக யாழ்.இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.
சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை
அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் முடிந்த வரையில் 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கின்றோம்.
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில் ஒன்று அரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்.
பிரிந்த வடக்கு மாகாணத்தில் ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது அந்த காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

