குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்த நபர்! பலப்படுத்தப்படும் விசாரணை
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன்தினம்(25.06.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரை அச்சுறுத்திய சந்தேக நபர்
119ற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினத்தன்று இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது, பிரதான சந்தேக நபர் பொலிஸாரை அச்சுறுத்தி அவர்களை காயப்படுத்தியதுடன் துப்பாக்கியையும் பறிக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த இடத்திற்கு இன்னும் சில பொலிஸார் அனுப்பட்டு சந்தேக நபர் பறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது, தலைமறைவான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
ஆரம்ப கட்ட விசாரணை
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 2000 ஆண்டு தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் 2004 ஆண்டு அந்த அமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிலிருந்து விலகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தின் போது குடிபோதையில் இருந்த சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அதை லோட் செய்து துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பாடம் எடுத்ததுடன் உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள் என ஏளனத்துடன் பொலிஸாரை வினவியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைதான சந்தேக நபர் 44 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.