தாதியின் தங்க சங்கிலியை கொள்ளையிட்ட நபர் ஆற்றில் மூழ்கி மரணம்
அம்பாலங்கொடை மீட்டியாகொடை பிரதேசத்தில் தாதி ஒருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு விட்டு ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்த நபர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றியதினம் இடம்பெற்றுள்ளது.
பலப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதி, மலவென்ன ரயில் கடவைக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், தாதி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
தாதி சத்தமிட்டதை அடுத்து அந்த இடத்திற்கு சென்ற பிரதேசவாசிகள் சந்தேக நபரை விரட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர் அருகில் உள்ள ஆற்றில் குதித்துள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து ஆற்றில் குதித்த சந்தேக நபரை மீட்டு ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையினர் கூறியதாக மீட்டியாகொடை பொலிஸார் கூறியுள்ளனர்.