கிண்ணியாவில் உள்ள பள்ளிவாசல்களை திறக்க அனுமதி
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (4) அதிகாலை முதல் பள்ளிவாசல்களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, கிண்ணியா நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை எதிர்வரும் 11ஆம் திகதி திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டு செயலணியினால் எடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை தலைவர்கள், பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர், உலமா சபைத் தலைவர், கிண்ணியா, குறிஞ்கேணி பிரதேச சுகாதார அலுவலக அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் தீர்மானங்களுக்கு அமையப் பள்ளிவாசல்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழுகைக்கும் அரை மணி நேரமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களுக்குப் பள்ளியில் நுழைவதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது.
தொழுகைக்கு வருபவர்கள் தொழுவதற்காக விரிப்பு கொண்டு வருவதோடு ,முகக்கவசம் அணிந்தும் வரவேண்டும், ஒவ்வொரு பள்ளி நுழை வாசலிலும் கிருமித்தொற்று நீங்கி வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் தொழும் இடம் கிருமித்தொற்று நீக்கியால் சுத்தம் செய்ய வேண்டும்.
தொழுகையின் போது, சமூக இடைவெளியைப் பேண வேண்டும். ஜனாசா தொழுகைகளை வீட்டிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
திருமண பதிவுகள், நிகாஹ் போன்றவை வீட்டிலே செய்யப்பட வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிவாசல்களை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





