பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ள பேராதரவு! சாந்த பண்டார வெளியிட்ட அறிவிப்பு
"நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது,
புதிய சட்ட மூலங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஆதரவு மிக வேகமாகப் பெருகி வருகின்றது.
குறிப்பாக, நாட்டின் கிராமிய மட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்குப் பேராதரவு கிடைத்துள்ளது என்பதை எங்களால் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது.

எனவே, எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள அச்சப்படும் நிலையில் எங்களது கட்சி இல்லை. அதனால்தான், இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போதைய அரசுக்கு மிகவும் துணிச்சலாகவும், பகிரங்கமாகவும் நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம்.
அரசியல் இலாபங்களுக்காகக் கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிக்கக்கூடிய புதிய சட்ட மூலங்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. சுயநல அரசியலைத் தடுக்கும் அத்தகைய சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் நிச்சயமாக முழுமையாக ஆதரிப்போம்." என்றார்.