தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர்! பியால் நிஷாந்த
எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறியுள்ள தற்போதைய அரசை, இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பியால் நிஷாந்த தெரிவித்தார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று இந்த நாடு ஒரு மயான பூமியாகவோ அல்லது இரத்த ஏரியாகவோ மாறாமல் இருப்பதற்குக் காரணம் எமது இராணுவத்தினரும், அவர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார்.
தற்போதைய அரசு
மகிந்த இட்ட அடித்தளத்தினாலேயே நாடு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய அரசு எமது இராணுவத்தினரை கௌரவமான முறையில் அழைக்கக்கூடத் தயங்கி, அவர்களை வெறும் 'சிப்பாய்கள்' என விளிப்பது மிகுந்த கவலைக்குரியது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையோ அல்லது எமது இராணுவத்தினரின் கௌரவத்தையோ உலகிற்குப் பறைசாற்ற இந்த அரசு முன்வரவில்லை. அரசில் உள்ளவர்கள் சிலர் தமது இயலாமையை மறைக்கப் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.
இராணுவத் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் கடனுக்கும் உதவித் திட்டங்களின் கீழும் பெறப்பட்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என அவர்கள் கூறுவார்களானால், தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்களில் உள்ள பௌதீக வளங்கள் பலவும் அவ்வாறு பெறப்பட்டவையே. அவற்றையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தேவையான நடவடிக்கை
அநாவசியமான கருத்துக்களைக் கூறி மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதை விடுத்து, இராணுவத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அப்பாவி மக்களின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கத் தவறினால் மிக விரைவில் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.
இந்த நிலைமையைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்காவிட்டால், நாடு முன் எப்போதும் இல்லாத ஒரு அபாயகரமான நிலையை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.