வவுனியாவில் மக்கள் குறைகேள் நடவடிக்கைகள் முன்னெடுப்பு! (Video)
வவுனியாவில் கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகேள் நடவடிக்கைகளை மாவட்ட அபிவிருத்திக் குழுத் குழுத் தலைவரும், பிரதேச செயலாளரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம், சேமமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், நவ்வி மற்றும் இத்திக்குளம் ஆகிய கிராமங்களிலும் குறித்த மக்கள் குறைகேள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், மக்களது பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது குறித்த கிராம மக்களுக்கு நீண்டகாலம் கிடைக்கப் பெறாத வீட்டுத்திட்டம், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைக்கு வீதி ஏற்படுத்திக் கொடுத்தல், விவசாய பாதைகளை சீர்செய்தல், ஆவணம் இன்றி தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்துள்ள காணிகளை கிராம மக்களுக்கு பெற்றுக் கொடுத்தல், காணி ஆவணங்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் என்பனவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், விளையாட்டு மைதானம் பெற்றுக் கொடுத்தல், விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்குதல், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேலதிக காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை, சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை, பாடசாலை மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கு தீர்விளைப் பெற்றுக் கெபாடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பு செயலாளர் டினேஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) நகரசபை உறுப்பினர் நிரோசன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், ஈபிடிபி கட்சியின் கிராம மட்ட செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







