கோவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் கூடிய பொறுப்புடன் செயற்படல் வேண்டும் - சமன் தர்சன பாண்டிகோராள
தற்போது பரவியுள்ள கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் இச்சந்தர்ப்பத்தில் கூடிய பொறுப்புடன் செயற்படல் இன்றியமையாதது என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
மாவட்ட கோவிட் செயலணிக்கூட்டம் இன்று(28) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படாவிட்டால் இதன் பாதிப்பு மிக அதிகமானதாக அமையலாம். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவல், சமூக இடைவெளி பேணல், அநாவசிய நடமாட்டத்தைக் குறைத்தல் என்பனவற்றைப் பேணல் மிக முக்கியமானதாகும்.
சில பிரதேசங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் இன்றி நடமாடுவதாக அறியப்படுகின்றது. இவ்விடயம் மிகப் பாரதூரமானதாகும். முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்கள். அத்துடன் இராணுவம் மற்றும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதன் மூலம் மக்களது அநாவசிய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியும். அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும். திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகளவில் உள்ளனர்.
இதன் காரணமாக கோவிட் பரவல் ஏற்படக்கூடிய நிலை ஏற்படலாம். எனவே மாதாந்த சிகிச்சைக்கு வருபவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தி அவர்களது மாத்திரைகளை வீடுகளுக்கே கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் 13க்கு மேற்பட்ட ஆளணியினருக்கு கோவிட் தொற்று பரவியுள்ளது.
நோயாளிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் நோயாளிகளைப் பார்வையிட வைத்தியசாலைக்கு வருகைதரல் வேண்டும். மக்கள் வெளியேறலைக் கட்டுப்படுத்தும் வகையில் அத்தியவசியப்பொருட்கள் உட்படத் தேவையான பொருட்களை வீடுகளுக்கு நடமாடும் சேவை ஊடக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனவே மக்கள் தேவையான பொருட்களை வெளியே சென்று பெற்றுக்கொள்வதனை விடப் பாதுகாப்பாகக் காலடியிலேயே பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பூம்புகார் கிராம சேவகர் பிரிவில் அண்ணளவாக 80க்கு மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் கொடுப்பனவு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவிட் பரவலை அடிப்படையாகக் கொண்டு கோவிட் நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில் மாவட்டத்தின் சில வைத்தியசாலைகளின் வசதி வாய்ப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அரச நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,பொதுப்போக்குவரத்து உட்பட ஏனைய சேவைகளும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படல்வேண்டும். அது தொடர்பில் உரிய பொறுப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தற்போது பரவியுள்ள கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தி எமது செயற்பாடுகளை சுமூகமாக மேற்கொள்ளும் வகையில் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்துச் செயற்படுமாறும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, மேலதிக
அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், சுகாதார திணைக்கள அதிகாரிகள், இராணுவ
மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.