மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் சிவில் உடையில் பொலிஸார்!
பண்டிகைக்காலத்தில் கோவிட் - 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளப்பகுதிகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளில் கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டல்களை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வர்த்தக நிறுவனங்களை நடத்திச் செல்லும் நபர்கள் மற்றும் நுகர்வோர் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை சிவில் உடையில் நேற்று முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் கண்காணிப்பார்கள்.
அத்துடன், வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுப்படும்.
அதேபோன்று பேருந்துகளில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பது குறித்தும் அவதானம் செலுத்த விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கையில் அதிகமான விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை தடுப்பதற்காக 24 மணித்தியாலமும் விசேட நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.