அதானி குழுமத்தின் காற்றாலை செயற்திட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு எதிர்ப்பு(Video)
மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதேநேரம் காற்றாலை அமைக்க விரிவுபடுத்தலின் போது மன்னார் தீவு மக்களின் ஆலோசனையோ கருத்துக்களையோ அரசாங்கம் உள்வாங்கவில்லை எனவும் இந்த திட்டம் மன்னார் மாவட்டத்தில் சர்வாதிகராமான முறையில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகவும் மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவினால் இன்றைய தினம்(24.02.2023) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பிரஜைகள் குழுவினரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி திட்டம்
மேலும் கருத்து தெரிவிக்கையில்,“மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தற்பொழுது விரிவுபடுத்துவதற்காக இந்தியாவினுடைய அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்பட்டது போன்று இது மிகப்பெரியதொரு காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது என்ற செய்தி எங்களுக்கு ஒரு பேரிடியாக கிடைத்திருக்கின்றது.
எமது மன்னார் மாவட்ட மக்கள் இந்த காற்றாலை பிரச்சினையின் காரணமாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை அமைதி வழியிலே நடத்தி இந்த நாட்டு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தங்களுடைய ஆதங்கங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
இந்த காற்றாலை மின் பூங்கா திட்டத்தின் மூலமாக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கூட அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காமல் மக்களுடைய வேண்டுகோளை புறந்தள்ளி திரும்பவும் தெற்கு பகுதியில் முடித்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.
இந்த விஷயத்தை மக்கள் சார்பாக நாங்கள் கவலையுடனும் ஆதங்கத்துடன் திரும்பவும் எங்களுடைய அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
ஏற்கனவே தலைமன்னார் தொடக்கம் தாழ்வுபாடு வரை கிட்டத்தட்ட 36 காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த குறிப்பிட்ட பகுதிக்குள்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு
தலைமன்னார், நடுக்குடா ,பேசாலை, பெரியகரிசல், புதுகுடியிருப்பு ,சின்னகரிசல், தோட்டவெளி ,தாழ்வுபாடு,கீரி போன்ற கிராமங்கள் இந்த காற்றாலை மின் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது.
இப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மீன்பிடி, சிறு விவசாயம், அதேபோல் அந்த பகுதியில் இருக்கின்ற பனை ,தென்னை வளங்களை பயன்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியிலே கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றனர். இந்தக் காற்றாலை அமைப்பின் மூலமாக பாரம்பரிய கரவலை தொழில் மற்றும் கரையோர மீன்பிடி தொழிலை செய்கின்ற மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அந்த தொழிலை கைவிடக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது மண்ணெண்ணெய் உட்பட்ட எரிபொருள் என்பவற்றை மிக உயர்ந்த விலையிலேயே கடற்தொழிலாளர்கள் கொள்வனவு செய்து அவர்கள் கஷ்டப்பட்டு கடலுக்குள் சென்று வெறும் வலையுடன் மீன்பிடி இன்றி வீடு திரும்புகின்ற ஒரு துர்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மன்னர் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னார் தீவுப் பகுதிக்குள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். நகரமும் தீவுப்பகுதிக்குள் தான் அமைந்திருக்கின்றது. எனவே இத்திட்டத்திற்காக பெருமளவு காணிகள் தனியாரிடம் இருந்து அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டதன் காரணமாக தற்போதும், எதிர்காலத்திலும் இந்த மக்கள் விவசாயத்தை,கடல்தொழிலை அதேபோன்று பனை தென்னை வளங்களினால் தங்களுடைய ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருக்கும் பலர் அனைத்தையும் பெரும்பாலும் இழந்து ஒரு வறுமை நிலைக்குள் தள்ளப்படவேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் நகரத்தில் இருக்கின்ற வியாபாரிகளின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்படியான துன்ப நிலையில் தான் நாங்கள் மன்றாட்டமாக இந்த அரசாங்கத்திடம் இவ் செயற்திட்டத்தை வேறு பயன்பாடு இல்லாத இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஏற்கனவே வடபகுதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொடக்கம் இராண்டாயிரம் வரி இந்திய இழுவை படகுகள் மீன்வளத்தை அழித்துக் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த காற்றாலைகளும் கடற்கரையோரங்களில் அமைக்கும் போது கரையிலே மீன்கள் வருகின்ற நிலைமை குறைவடைகின்றது.
இதனால் கரையோர கடற்தொழிலாளர்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில காலங்களில் இந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டிய துன்பமான நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இந்த ஆபத்தை உணர்ந்தவர்களாக மிகவும் வினையமாக இந்த நாட்டு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் இந்திய தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திடமும் வேண்டி கொள்வது நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தேவை ஆனாலும் மக்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்விடங்களை அழித்து ஏற்படுத்தும் அபிவிருத்தியாக வேண்டாம்.
அப்பிடியான அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
எனவே மன்னார் மாவட்டத்தில் பாவிக்கப்படாத எத்தனையோ ஏக்கர் காணிகள் உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இருக்கும் அவ்வாறான காணிகளை இனங்கண்டு அந்த இடங்களில் இந்த திட்டத்தை மாற்றி இந்த மன்னார் தீவில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை தந்துவமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
