திலீபன் வழியில் வருகின்றோம்'' திலீபனின் ஊர்திக்கு வவுனியாவில் மக்கள் திரண்டு அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்று (20) வவுனியாவை வந்தடைந்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துடன் குறித்த ஊர்தி பவனி வருகின்றது.
மக்கள் திரண்டு அஞ்சலி
இந்நிலையில், வவுனியா மாநகரசபையின் முன்றலில் உள்ள பொங்கு தமிழ் நினைவுதூபி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் திடலுக்கு முன்னால் வந்த குறித்த ஊர்திக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொது மக்கள் எனப் பலரும் மலர் தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஊர்தி அங்கிருந்து வவுனியா வடக்கின் ஊடாக முல்லைத்தீவு நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.












