மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ளனர் - ஐ.தே.கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருந்த சாதகமான கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதை தற்போதைய அரசாங்கம் நிராகரித்தன் காரணமாக மக்கள் மீது தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சுமையை ஏற்ற நேரிட்டுள்ளதாக அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இதனை கூறியுள்ளது.
அரசாங்கத்தின் தோல்வியான பொருளாதார முகாமைத்துவத்திற்கு ஒரு உதாரணம் எரிபொருள் விலை அதிகரிப்பாகும்.
இது குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் வீழ்ச்சி எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய எரிபொருள் சூத்திரத்தை பொதுஜன பெரமுன அரசாங்கம் நிராகரித்தாலும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததன் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்குவதிலும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.