இலங்கையில் காலாவதியான சட்டங்களால் மக்கள் பாதிப்பு! மஹிந்த கவலை
"இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் காலாவதியான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதே அரசின் பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். புதிய 'நீதி இல்லம்' நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, உரையாற்றும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, "நீதித்துறையின் உதவியை நாடும் பொதுமக்களின் இல்லமாக புதிய கட்டடத் தொகுதி அமைய வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.
ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் நாம் முன்னிற்கின்றோம். நாட்டில் நீதி வழங்குவதன் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளைத் திறம்பட தீர்ப்பதற்குமான அணுகுமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் நாட்டு மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்" - என்றார்.