தமது காணிகளை மதகுரு ஒருவர் துப்புரவு செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சாவியாறு மற்றும் பரவிப்பாஞ்சான் போன்ற பகுதிகளில் உள்ள தமது காணிகளை பௌத்த மதகுரு ஒருவர் துப்புரவு செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
1985ஆம் ஆண்டு திரியாய் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடத்திற்கு வருகை தந்ததாகவும், இதனை அடுத்து தமது காணிகளை துப்பரவு செய்யும் போது வன இலாகா அதிகாரிகள் தடை விதித்ததாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும் 1985ஆம் ஆண்டு இடம்பெயரும் போது வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதையடுத்து அனைத்து ஆவணங்களும் தீப் பற்றியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இருந்தபோதிலும் தமக்குரிய சொந்த காணிகள் என தெரியப்படுத்தி சில ஆவணங்களை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வழங்கியுள்ள நிலையிலும் சாவியாறு மற்றும் பரவிப்பாஞ்சான் போன்ற பகுதியில் உள்ள குறித்த காணிகளை பௌத்த மதகுரு துப்புரவு செய்து வருவதாகவும், அதனைப் பெற்று தருமாறு பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ள நிலையிலும் காணிகள் சுவீகரிக்கபட்டு வருவதாக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஆகவே தமக்குரிய காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திரியாய் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.