முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் : வெளியான தகவல்
ஓய்வூதியம் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்காக செலவிடப்பட்ட தொகைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
1976 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகள் குறித்த விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிதி மற்றும் கணக்கு அலுவலகம்
இந்தநிலையில் 2024 ஜனவரி 25ஆம் திகதி வரை, மொத்தம் 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 182 வாழ்க்கைத் துணைவிகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இதனால் ஓய்வூதியம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 500இற்கும் அதிகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதத்துக்கு 23,541,645 ரூபாய்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றன.
இறந்த உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைவிகளுக்கு மாதத்துக்கு 11,025,216 ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்புடையவர்களுக்கு மாதத்துக்கு 420,121 ரூபாய்கள் வழங்கப்படுகின்றன.
இந்தக் கொடுப்பனவுகள் நாடாளுமன்றத்தின் நிதி மற்றும் கணக்கு அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருவதாக காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |