பிரஜாசக்தி நியமனத்தை எதிர்க்கும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்
அரச உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் பிரஜாசக்தியை கொண்டு வந்தோம் என பருத்தித்துறை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தால் சபையில் களேபரம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பிரதேச சபையின் இந்த வருடத்திற்கான முதல் அமர்வு நேற்று(28.01.2026) தவிசாளர் யுகதீஸ் தலைமையில் பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கண்டனம் தெரிவித்த சபை
இதன்போது, முதலாவது பிரேரணையாக அரசாங்கத்தின் பிரஜாசக்திக்கு எதிராக தவிசாளரால் சபையில் கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிராக வாதிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், “அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை, அவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் தான் இந்த பிரஜா சக்தியை கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதனால் சபையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் கருத்திற்கு தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரஜாசக்தி நியமனத்தை எதிர்ப்பது தவறு
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கணைச்செல்வன்,
கிராமங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தினால் இந்த பிரஜாசக்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அவர்கள் எவ்வாறான வேலை திட்டத்தை செய்ய போகிறார்கள் என்று யாருக்கும் இதுவரை தெரியாது. அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே அதனை எதிர்ப்பது ஒரு தவறான விடயம்.
பிரதேச சபையில் பிரஜாசக்திக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவது தவறான விடயம். மேலும், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் அவர்களை நாம் எதிர்ப்போம். ஆனால் தற்போது அவர்களை எதிர்ப்பது என்பது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை தமிழரசுக் கட்சியின் 9 வாக்குகளாலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு வாக்குமாக 10 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.