பருத்தித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு (video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கூட்டம் நேற்று (05.12.2022) நகரபிதா ஜோ.இருதயராஜா தலைமையில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் சார்பாக வாக்கிட்டதால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை
வரவு செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்த நிலையில் நகர சபை செயலாளரால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஒரு மேலதிக வாக்கால் வெற்றி
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 7 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டது என்று நகர சபை செயலாளர் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மீளத் திருத்திய பாதீட்டைக் கொண்டுவரவிருப்பதாக அறிவித்து நகரபிதா கூட்டத்தை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.