அரச அதிகாரியின் செயற்பாட்டால் விவசாயிகள் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள்
முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் கமநல சேவைத்திணைக்கள அரச அதிகாரியின் செயற்பாட்டால் விவசாயிகள் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் மேட்டு நில பயிர் செய்கையாளர்களுக்கு உரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து (07) இன்று காலை தொடக்கம் அதிகளவான விவசாயிகள் கமநல சேவைத்திணைக்களத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
இதன்போது மேட்டு நில பயிர் செய்கைக்கான உரம் வழங்குவதில் பல முறைகேடுகள் இருப்பதாக ஒட்டுசுட்டான் பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டு நில பயிர் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளை விவசாய போதனா ஆசிரியர் உறுதிப்படுத்த வேண்டும் இதற்கான படிவம் ஒட்டுச்சுட்டான் தனியார் கடை ஒன்றில் விநியோகிக்கப்பட்ட நிலையில், கமக்கார அமைப்பினால் அதற்கான சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
சில கமக்கார அமைப்பினர் சலுகையில் மேட்டுநில பயிர் செய்கை இல்லாத விவசாயிகளுக்கும் உரத்திற்கு சிபாரிசு செய்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடைகளில் அதிக விலை கொடுத்து உரத்தினை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் குறைந்த விலையில் உரத்தினை பெற்றுக்கொள்ள எந்த விவசாயிகள் பின்னிற்பார்கள் அனைத்து விவசாயிகளும் ஏதோவொரு வகையில் உரத்தினை பெற்றுக்கொள்ள முண்டியடிக்க வேண்டிய நிலையே இன்று ஒட்டுச்சுடுட்டான் கமநல சேவை நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.
அதிகளவான மக்கள் ஒன்று கூடியதால் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்று கூடிய பல விவசாயிகளுக்கு ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.