இலங்கையில் மிக குறைந்த பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
இலங்கையில் ஒரு மாதத்துக்கு பின்னர் மிகக்குறைந்த பி.சீ.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பி.சீ.ஆர் சோதனைகள் இதுவாகும்.
அதன்படி, 2021, ஜூன் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கையில் மொத்தம் 15,214 பி.சீ.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் நேற்று நாட்டில் மொத்தம் 2,275 கோவிட் - 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்போது 2021 மே மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கடந்த ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட்ட நாளாந்த பி.சீ.ஆர் சோதனைகளின் போது, அதிக எண்ணிக்கையில் மே 16 ஆம் திகதியன்று 27,183 சோதனைகள் பதிவாகியுள்ளன.
அதன் பின்னர் நாட்டில் நாளாந்தம் நடத்தப்படும் பி.சீ.ஆர் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18,885 பி.சீ.ஆர் சோதனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. திங்களன்று நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 16,873 என தெரிவிக்கப்பட்டுள்ளது.