வவுனியா கற்குழியில் 97 பேரிடம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை
வவுனியா, கற்குழிப்பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக 97 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக வவுனியா நகரக் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்குழிப் பகுதியில் பொலிஸாரும் , சுகாதாரப் பிரிவினரும் இணைந்து எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.
அத்தியாவசிய தேவை கருதி பாஸ் அனுமதி பெற்று வீதியால் பயணித்தவர்கள், தேவையற்ற வகையில் கற்குழி கிராமத்தில் நடமாடியவர்கள், வீடுகளிலிருந்தோர் எனப் பலரும் பொலிஸாரால் வரவழைக்கப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் அவர்களது விபரங்கள் பதியப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கற்குழியின் மூன்று பகுதிகளில் இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 97 பேர் வரையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை
குறித்துத் தீர்மானிக்கப்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.