கோட்டாபயவுக்கு பதிலாக பிபி ஜெயசுந்தரவே ஆட்சி செய்தார்! மகிந்த விசுவாசியின் தகவல்
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக செயற்பட்டாலும் பிபி ஜெயசுந்தரவே நாட்டை நிர்வகித்ததாக அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் 50வருட அரச சேவை அனுபவத்தை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மகிந்த ராஜபக்சவை தமக்கு பிடிக்கும் என்ற போதும், தாம் ராஜபக்சவாதி அல்ல என்றும் குறிப்பிடடுள்ளார்.
கோட்டபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட வரி குறைப்பு தொடர்பான யோசனையின்போது பிபி ஜெயசுந்தரவே, அதனை அவசரமாக நிறைவேற்றினார் என்று அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வரி குறைப்பு காரணமாக அரசுக்கு 600 பில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகி்ன்றன.
இந்தநிலையில், தாம் அமைச்சரவை செயலாளராக இருந்தபோதும், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இடையிலேயே பிபி ஜெயசுந்தரவினால் வரி குறைப்பு யோசனைக்கான ஆவணம் அவசரமாக கொண்டு வரப்பட்டது.
இதன்போது தாம், ஜனாதிபதி கோட்டாபயவிடம் சென்று இந்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்று அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கலாம் என்று கூறியபோது அதற்கு ஜனாதிபதி உடன்பட்டார்.
எனினும் பிபி ஜெயசுந்தரவே, இது இந்த வாரமே அமைச்சரவையின் அனுமதி பெறப்படவேண்டும் என்று கூறி, அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டதாக அமரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
பிபி ஜெயசுந்தரவுக்கு நிதி சம்பந்தமான விடயங்கள் தெரியும் என்ற போதும், ஜனாதிபதியின் செயலாளர் என்ற அளவில் அவருக்கு நிர்வாக சேவையில் அனுபவம் இல்லை. அவர், தரகு பணம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு அதிக நாட்டம் காட்டாதபோதும், தமது அதிகாரத்தை அடுத்தவர்களுக்கு காட்டவேண்டும் என்பதில் விருப்பமுள்ளவர்.
அத்துடன் ராஜபக்சர்கள் எதனைக் கூறினாலும் அதனை உடனடியாக செய்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். பிபி ஜெயசுந்தரவை, ஜனாதிபதியின் செயலாளராக நியமிப்பதற்கு பசில் ராஜபக்சவே பரிந்துரையை செய்திருந்தார். ஏனெனில் பிபியும் பசிலும் நண்பர்களாவர் என்றும் அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கோட்டாபய அரசாங்கம் இன்றைய வீழ்ச்சி நிலைக்கு சென்றுள்ளமைக்கு 75 வீதமான பொறுப்புக்கூறவேண்டியவர் பிபி ஜெயசுந்தர என்று அமரசேகர தெரிவித்துள்ளார்.
சீனாவிடன் கடன் பெற்றமை, தவறான காரியம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், பாதையமைப்பு தொடர்பாக ஒப்பந்தக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும்போது அது தொடர்பில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை இன்றைய கீழ் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு அவருடைய குடும்பமே காரணமாகும். மகிந்த பணத்துக்கு ஆசைப்பட்டவர் அல்லர் என்றும் அமரசேகர தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச எப்போதும் பணம் தேடுவதில் விருப்பமுள்ளவர் என்று கூறிய அமரசேர, அவருக்காகவே பிபி ஜெயசுந்தர செயற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் ராஜபக்சர்களின் அரசியலை அடுத்த பரம்பரைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளாதாகவும் அமரசேகர தெரிவித்துள்ளார்.
தம்மை தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக நியமித்தபோதும், உரிய காலம் முடிவடைவதற்கு முன்னரே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கொலம்பகேயினால், தமது சேவை காலம் முடிவடைந்து விட்டதாக கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும் அது ஜனாதிபதியின் பணிப்புரைக்கு ஏற்ப அல்லாமல் கொலம்பகேயின் விருப்பப்படியே அனுப்பப்பட்டதாக தமக்கு தெரிந்தது என்று அமரசேகர தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் கீழ் இருந்து சிறப்பாக சேவையாற்றியபோதும் அவரால், தனித்து நின்று தீர்மானங்களை எடுக்கக்கூடிய நிர்வாகத்திறமை இல்லை.
இந்தநிலையில் போரை வெற்றிகொண்டது சரத் பொன்சேகா என்று குறிப்பிட்ட அமரசேகர, அதற்கு தலைமைத்துவத்தை கோட்டாபய வழங்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.